Showing posts with label கமல்ஹாசன். Show all posts
Showing posts with label கமல்ஹாசன். Show all posts

Monday, February 11, 2013

விஸ்வரூபம், கமல், பி ஜே - சர்ச்சைகளும் சில கருத்துக்களும்

பதிவரானதுக்கு அப்புறம்தான் எத்தன எத்தன பிரச்சினை. முன்பெல்லாம் பதிவுகள படிக்கறப்போ ஒரு சந்தோஷம் இருக்கும், இப்போல்லாம் இந்த பக்கம் வந்தாலே ஒரே மன உளைச்சல், தலைவலி, வயிற்ருப் போக்கு, வாந்தி பேதிதான். ஏதாவது ஒரு சின்ன காரணம் கெடைச்சா போதும் அடிச்சிக்கறதுக்குன்னு ஒரு கூட்டமே இருக்கு, இதுக்கு நடுவுல எரியற நெருப்புல எண்ணைய ஊத்திவிட்டு குளிர் காயறதுக்குன்னு ஒரு கூட்டம், நமக்கு சம்பந்தமே இல்லையின்னாலும் ஒரு நாலு பதிவ போட்டு ஹிட்டு வாங்குறதுக்கும் சண்டைய மூட்டி விடுரதுக்கும்ன்னு. இதெயெல்லாம் படிக்கறப்போ இதுல எல்லாம் இருந்து ஒதுங்கியே இருக்கலாம்ன்னு நினைச்சா, நீயும் ஒரு பதிவர், உனக்கும் சில சமுதாய பொறுப்பு இருக்குன்னு நம்மளையும் இழுத்து விடுறதுக்குன்னு நாலு நண்பர்கள். இந்த சின்ன வயசுல இத்தன பிரச்சினைகளையும் நான் எப்படித்தான் சமாளிக்க போறேனோ? என்ன நடந்தாலும் நடக்கட்டும்ன்னு என்னோட கருத்துக்களையும் இங்கே பதிவு செய்து விடுகிறேன்.


கமல் எனும் கலைஞருக்கு ஆதரவாளர்களும் எதிரிகளும் ஏராளம். உண்மைய சொல்லப்போனா எதிரிகள்தான் ஏராளம், எதோ ஒரு காரணுத்துக்காக அவர எதிர்கறதுக்கு ஏதாவது ஒரு கூட்டம் எப்பவுமே இருக்கும். அந்த கூட்டத்த எதிர்கறவங்க எல்லாரும் உடனே கமல் ஆதரவாளர்களாக மாறிடுவாங்க. கமல் எதிர்ப்பு தனிப்பட்ட குழு அரசியல விட பெரிதாக இருக்கறப்போ எதிரிக்கு எதிரி நண்பன்னு சில பேர் அந்த கூட்டத்த ஆதரிக்கவும் செய்வாங்க, இன்னும் சிலபேர் சும்மா இருந்த எவனயாவது சீண்டி விட்டு எதிர்ப்ப கிளப்பிவிட்டு அதுல குளிர் காஞ்சிட்டு இருப்பாங்க. இது இன்னிக்கி நேத்து இல்ல கடந்த பத்து பதினச்சு வருசமா நடத்துக்கிட்டுத்தான் இருக்கு. இன்னிக்கி என்னன்னா குழு அரசியல்கள் கமல் எதிர்ப்பையும் தாண்டி வலுப்பெற்றிருக்கு. அதனால எப்பவுமே ஒரு கலைப் படைப்பை "கலை நேர்த்தி/நேர்மை" அடிப்படையில் வைத்து விமர்சிக்கக் கூடியவர்கள் கூட, இந்த குழு அரசியலை மையப்படுத்தியே விமர்சனத்த தொடுக்கறாங்க. இப்படியே போய்க்கிட்டு இருந்தா சீக்கிரமே தமிழ் சினிமா ஹாலிவூட் குப்பைகளை மிஞ்சிவிடும்ங்கறதுல எந்த சந்தேகமும் இல்லை. இதுதான் நம் முன்னே இருக்கும் நீண்டகால பிரச்சினை. 

இத விட்டுட்டு குறுகிய கால பிரச்சினை என்னன்னு பார்த்தோம்னா விஸ்வரூபமும் அதை சூழ உள்ள சர்ச்சைகளும்.

முதலாவதா விஸ்வரூபம் படத்தை ஒரு சாதாரண வணிக சினிமாங்கற தரத்தை விட உயர்த்திப் பார்க்கவேண்டிய எந்த தேவையும் இல்லை. படம் ஒரு கருத்தையும் போதிக்கவும் இல்லை, எந்த நியாயமான விவாதத்தை கிளப்பவும் இல்லை. தீவிரவாதத்தையும், சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தையும், உலக அரசியல் குழப்பங்களையும் வணிகமாக்கும் சாதாரண மூன்றாம்தர ஹாலிவூட் உத்தி வணிக முயற்சிதான் இந்த சினிமா. படத்தில் போதிக்கப்படும் கருத்துக்கள் அனைத்தும் பொதுப்புத்தியின் அடிப்படையில் உருவானதே அன்றி எங்கும் ஒரு ஆழமான பார்வை கிடையாது. விஸ்வரூபம் படம் பார்த்தவர்கள் யாரும் இதை மறுக்க முடியாதுங்கறது என்னோட கருத்து. கமல் ஒரு நேர்மையான கலைப் படைப்பை கொடுக்க மறுபடியும் தவறிவிட்டார். இன்னுமொரு வகையில் சொல்லப்போனால் ஆயுத எழுத்துங்கற படத்தை எடுத்து மணிரத்தினம் எப்படி மணிரத்தினம்கற மாயையை உடைத்தாரோ அதே போன்று விஸ்வரூபம் படம் மூலம் கமல் என்கிற மாயையை கமலும் உடைத்திருக்கிறார். இனியும் ஒரு பொறுப்பு வாய்ந்த கலைஞராக கமல் குறைந்தபட்ச கலை நேர்த்தியுடன் செயல்படுவார் என்கிற நம்பிக்கை ஒரு தீவிர கமல் ரசிகனான எனக்குக் கூட இல்லை. வணிக வெற்றிக்காக கமல் எதையும் செய்வார் என மீண்டும் அடித்துக் கூறியிருக்கிறார் கமல்.

படத்தோட ஸ்கிரிப்ட் முழுசா எழுதி முடித்ததும் ஆப்ரூவலுக்காக அமேரிக்கா அனுப்பி வைத்ததாகவும், ஸ்கிரிப்ட்டில் எழுதிய பல சம்பவங்கள் அதன் பின்னர் நிஜத்தில் நடந்ததாகவும் சமீபத்தில் ஒரு தொலைக்காட்ச்சி நிகழ்ச்சியில் கமல் கூறுகிறார். ஒரு தமிழ் சினிமாவை எடுக்க அமெரிக்க அரசிடம் அனுமதி கோரும் கமல், தமிழ் நாட்டில் எத்தனையோ முஸ்லீம்கள் வாழும் போது, ஒரு முஸ்லீமிடம், தலிபான்கள் குரான் முன்னாடி கொல்றாங்களே இதத்தான் குரான் சொல்லுதான்னு ஒரு கேள்வி கூடவா கேட்க்க முடியாது? அது போகட்டும், இந்த படத்தின் தடையை அனுமத்தித்தால், ஒரு குழுவிடம் காட்டி அனுமதி பெற்றுவிட்டுத்தான் திரையிட வேண்டும்ன்னு எதிர்காலத்துல சட்டம் வரும்ன்னு பயப்படுபவவர்கள், விஸ்வரூபம் போன்ற முன்னுதாரணங்கள் வந்தால் ஒரு தமிழ் படம் எடுக்க கூட அமெரிக்க அரசிடம் அனுமதி கோரவேண்டி இருக்கும் அதனால் விஸ்வரூபம் போன்ற படங்களை எதிர்க்கிரோம்ன்னு சும்மா ஒரு பேச்சுக்கு கூட சொல்லாமல் இருப்பதும் இந்த எதிர்ப்பும் ஆதரவும் நேர்மையானதா இல்லை குழு அரசியலா என்கிற சந்தேகத்தை இன்னும் வலுப்படுத்தவே செய்கிறது.


இப்போ இந்த படத்த எதிர்க்கலாமா? கருத்தியல் ரீதியாக இந்த படத்துக்கு விமர்சனம் முன்வைக்கலாம், அதுதான் நியாயம், ஆனால் படத்தை கண்மூடித்தனமாக எதிர்க்க முடியாது. இந்தப் படம் இஸ்லாத்தை கேலி செய்கிறது என்கிற வாதம் எந்தளவு அபத்தமோ, இந்த படம் தீவிர வாதத்தை எதிர்கிறது எனும் வாதமும் அதே அளவு அபத்தமாகவே எனக்கு படுகிறது. ஒரு கலைஞனுக்கு அவனது எண்ணத்தில் உதித்த ஒன்றை ஒரு படைப்பாக்கி மக்கள் முன் சமர்ப்பிக்கும் உரிமையை யாரும் மறுக்க முடியாது, மறுக்கவும் கூடாது. ஒரு படைப்பை உருவாக்கும் வரையில்தான் அது நமக்கு சொந்தம், அதன் பின் அது நுகர்வோன் சொத்து ஆகி விடுகிறது என்பதை படைப்பாளியும் மறக்கக் கூடாது. ஆப்கான் - அமெரிக்கப் போராட்டத்தை ஒரு தமிழ் படமா எடுக்கனுமாங்கறது தேவை அற்ற வாதம். அதை தமிழ் படமா எடுக்கும்போது எப்படி வேணும்னாலும் எடுப்பேன்ங்கறதும் ஒரு பொறுப்புள்ள படைப்பாளி முன்வைக்கக் கூடிய வாதம் அல்ல. முடிவா விஸ்வரூபம் மீது தடை கோரி நடத்தப் பட்ட போராட்டம் நியாம் அற்றது, வன்மையாக கண்டிக்கப் பட வேண்டியது. அதேபோன்று, ஒரு குழு அந்தப் படத்தை தடை கோரி போராடியது என்கிற ஒரே காரணத்துக்காக, ஹாலிவூட் தரத்தில் ஒரு தமிழ் சினிமா, தீவிரவாதத்தை எதிர்க்கும் ஒரு அற்புதமான படம், இதை எல்லாரும் ஆதரிக்கனும், இதை எதிர்கறவன் எல்லாம் தீவிரவாதின்னு சொல்றதும் நேர்மை அற்ற வாதம்.

இதை நான் நேர்படவே கூறவேண்டும், திரு பீ. ஜே அவர்களின் ஒருமணிநேர விஸ்வரூப உரையை பார்க்கும் துர்பாக்கிய நிலைமை எனக்கும் ஏற்பட்டது. அந்த உரையை முற்றும் முழுதாக நான் கண்டிக்கறேன். மாற்றுக் கருத்தை நாகரீகமான முறையில் முன்வைக்க வேண்டும். மானுஷ்ய புத்திரனை வேறு பெயர் சொல்லி அழைப்பதையோ, பாரதிராஜாவை மோசமான முறையில் கேலி செய்வதையோ யாரும் அனுமத்திக்க முடியாது. எந்த ஒரு கருத்து மோதலிலும் தனி மனித தாக்குதல் இருக்கக் கூடாது. இஸ்லாத்தின் மீது சேறை வாரி இறப்பது விஸ்வரூபம் போன்ற படங்கள் என்று நீங்கள் நினைப்பீர்களேயானால் அது மிகவும் தவறு, இது போன்ற உங்கள் நடவடிக்கைகளும் தான். இஸ்லாம் அதிகளவில் தவறாக புரிந்துகொள்ளப் பட்ட ஒரு மார்க்கம் என்பதை ஒன்றுக்கு மேற்பட்ட முஸ்லீம் நண்பர்களுடன் பழகிய எவரும் மறுக்க மாட்டார்கள். முஸ்லீம் அல்லாதவர்கள் மட்டும் அல்ல முஸ்லீம்களில் கூட பெரும் பகுதியானவர்கள் இஸ்லாத்தை தவறாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பது இது சம்பந்தமாக வெளிவந்த சில பதிவுகளையும் அதற்க்கான பின்னூட்டங்களும் படிக்கும் ஒருவருக்கு தெளிவாகத் தெரியும். திரு கமல் ஹாசன் அவர்களுக்கு ஒரு படைப்பாளியாக எவ்வளவு பொறுப்பு இருக்கிறதோ அதைவிட நூறு மடங்கு அதிக பொறுப்பு பீ ஜே போன்ற தலைவர்களுக்கு இருக்கிறது. இஸ்லாத்தை மக்கள் தவறாக புரிந்து கொள்வதற்கு நீங்களே காரணமாகி விடாதீர்கள். விஸ்வரூபம் படத்தை நேர்மையான முறையில் விமர்சிக்கும் பொறுப்பு ஒரு கலை விமர்சகருக்கு இருப்பது போல, பீ ஜே அவர்களின் செயல்களை கண்டிக்கும் பொறுப்பு ஒவ்வொரு முஸ்லீமுக்கும் இருக்கிறது. 


தாலிபான் என்பது ஒரே அமைப்பாக இருந்தபோதும், தாலிபான்களில் அடிப்படை நோக்கம் சம்பந்தமாக மூன்று பிரிவு இருக்கிறது. ஒன்று ஆப்கானிஸ்தானை முன்னேற்ற வேண்டும் என்கிற நோக்கில் ஆப்கான் மக்களால் உருவாக்கப் பட்டது, ரெண்டு ஆப்கானிஸ்தானை பொருளாதார ரீதியிலும் கல்வி, கலாசார ரீதியிலும் பாகிஸ்தானுக்கு அடிமையாக வைத்திருக்கவேண்டும் என்கிற நோக்கில் பாகிஸ்தானினால் உருவாக்கப் பட்டது, மூன்று இஸ்லாத்தை பயங்கரவாத மதமாகவும், உலகின் பொது எதிரியாகவும் சித்தரிக்க வேண்டும், அதன் மூலமாக தனது எண்ணை வழியை அமைத்துக்கொள்ள ஈரானில் இருந்து ஆப்கானிஸ்தான் வரை அனைத்து நாடுகளையும் அடிமைப்படுத்த அமெரிக்காவால் உருவாக்கப் பட்டது. இதில், இஸ்லாத்துக்கான போராட்டம், ஜிஹாத் இதர விதரங்கள் எங்கும் இல்லை. சுய நிர்ணய உரிமைக்காக போராடும் தலிபான்களை எதிர்க்க வேண்டிய எந்த அவசியமும் அமெரிக்க அடிவருடிகளை தவிர யாருக்கும் இல்லை, அதே போன்று இஸ்லாத்தின் பெயரை களங்கப்படுத்த பெண்கள் உரிமையயை, சிறுவர் உரிமையை மறுக்கும் தலிபான் பிரிவினரதும், பொருளாதார ரீதியில் ஆப்கானை வீழ்த்த புத்தர் சிலையை தகர்த்த பிரிவினரையும் மதத்தின் பெயரால் ஆதரிக்கும் எந்த தேவையும் உலகில் எந்த மூலையில் உள்ள எந்த முஸ்லீமுக்கும் இல்லை. இதையும் மீறி ஆப்கான் போரும், அல்கயிதா, தலிபான் தரப்பும் இஸ்லாம் வளர்க்க ஜிஹாத் நடத்துவதாகவும், புனிதப் போராளிகளாகவும், அமேரிக்கா தீவிரவாதத்துக்க்கு எதிரான போர் நிகழ்த்துவதாகவும் இன்னும் யாரும் கற்பனை பண்ணிக்கிட்டு இருந்தா, விஸ்வரூபம் கூறும் "அமெரிக்கன் எண்ணைக்காக போராடுறான் (உண்மை), நாம அல்லாஹ்வுக்காக போராடுறோம் (சுத்தப் பொய்)" டயலாகை நம்பிக்கிட்டு இருந்தா அதைவிட முட்டாள் தனம் எதுவுமே இருக்காது. 

இனி விஸ்வரூபம் படத்தின் கருத்தியல் சம்பந்தமாக சில கருத்துக்கள். 

1. தமிழ் சினிமாவுல இஸ்லாமியர்களை சித்தரிக்கும் போது காலா காலமாக இருந்துவரும் டைப் காஸ்டிங் கமலுக்கு தெரியாது ஒன்றும் இல்லை, அதை உடைக்க நினைக்கும்போது மதத்தையும், மதத்தை பின்பற்றுவோரையும் பிரித்து நோக்கக்கூடிய நிலைக்கு பார்வையாளனை தயார் படுத்த கமல் தவறிவிட்டார். அதற்க்கான சந்தர்ப்பங்கள் திரைக் கதையில் இல்லாமலும் இல்லை எனும்போது சற்று கவலை ஏற்படவே செய்கிறது. எந்த ஒரு மதத்திலும் மதத்தை சரிவர புரிந்துகொள்ளாத ஒரு கூட்டம் இருக்கவே செய்யும், அது மதத்தின் பெயரால் செய்யும் பல காரியங்கள் மதத்தை இழிவுபடுத்துவதாக அமைந்துவிடும். சரியான புரிதல் இல்லாதபோது, மூன்றாம் தரப்பு அந்த மக்களை இலகுவில் ஆட்டி வைக்க முடிகிறது. தலிபான்கள் எது செய்தாலும் கண்மூடித்தனமாக ஆதரிக்கும் ஒரு கூட்டம் இருப்பதும் சரியான புரிந்து கொள்ளல் இல்லாததனாலேயே.


2. அமரிக்கர்கள் பெண்களையும், குழந்தைகளையும் கொல்ல மாட்டார்கள்ன்னு தீவிரவாதி வாயாலேயே வாறமாதிரி வசனம் அமைக்கும் போது (அடுத்த காட்சியிலேயே பெண்கள், சிறுவர்கள் தங்கியிருக்கும் இடத்தின் மீது அமெரிக்க வானூர்திகள் கூண்டு வீசுவதாக காட்சி அமைத்த போதும்), அமெரிக்க வீரன் சுட்ட குண்டு தவறுதலாக ஒரு பெண்ணின் மீது பட்டுவிட அவன் முகம் சுழிப்பதாக காட்சி அமைக்கும் போது , தீவிரவாதிகள் கொலைசெய்யும்போது பாவிக்கும் குரான் வாசகங்கள், அல்லாஹு அக்பர் கோஷங்கள் தீவிரவாதமும் ஜிஹாதும் ஒண்ணுன்னு சொல்லற ஒற்றைப்படை பார்வயத்தான் உறுதி செய்யுது. மனிதர்களை கொலை செய்வது எவ்வளவு பெரிய தவறுன்னு இஸ்லாம் சொல்லக்கூடிய எந்த ஒரு விடயமும் படத்தில் காட்டப்படாமல் விடுபட்டது கவலை தருவது. ஒரு பொறுப்புள்ள கலைஞராக, ஒன்று கமல் இந்த விடயங்களை தவிர்த்து இருக்கலாம், இல்லை அது தவறு என்பதை சொல்லி இருக்கலாம், தீவிரவாதத்திற்கு எதிரான குரான் வசனங்களை மேற்கோள் காட்டி இருக்கலாம். அல்லது நமது முஸ்லீம்சகோதரர்களாவது கமலையும் கலைஞர்களையும் ஒருமையில் திட்டாமல், குரானின் பெயரால் நடக்கும் கொலைகளை நியாயப் படுத்தாமல், குரான் போதிக்கும் அகிம்சையை எடுத்துக் காட்டியிருக்கலாம்.   

3.FBI அதிகாரியாக வரும் கறுப்பின பெண் முட்டாளாகவும், நாகரீகம் அற்றவளாகவும் சித்தரிக்கப்பட்டும் வெள்ளை அமெரிக்கர்கள் நாகரிக காவலர்களாக சித்தரிக்கப்பட்டும் இருப்பது. வெள்ளைக்கார FBI ஆபீசர் முட்டாள் தனமாக நடந்து கொள்வதாக காட்சி இருந்தாலும், அதற்க்கு காரணமாக கமலின் பையிலிருந்து அவர் கண்டெடுத்த துப்பாக்கியை காட்டி அவரது நடத்தையை நியாயப் படுத்தும்போது, இது கொஞ்சம் உறுத்தலாகவே இருந்தது. ஆப்மார்க் ஹாலிவூட் திரைப்பட கறுப்பின குண்டுப் பெண் தான் இவர். இந்த அளவு உலகத் தரத்துக்கு கமல் போயிருக்கத் தேவையில்லை. 

4. தலிபான்கள் பெண்களின் மீது அடக்குமுறையை கையாள்வதாகவும், சிறார்களின் குழந்தைப் பருவம் முற்றிலும் பறிக்கப்பட்டுவிடதாகவும் மிகவும் நுணுக்கமான காட்சிகள் அமைக்கப்பட்டபோதும், நாயகன் பாத்திரம் அதைக் கண்டு பச்சாதாப படுவதாக வந்தபோதும் இஸ்லாம் பெண்களின் உரிமையை, சிறுவர் உரிமையை எவ்வளவு காக்குறது என்பதை காட்ட மறுத்தது அமெரிக்கர்களின் பிரச்சாரத்தை வலிமைப் படுத்துவதாகே உள்ளது. ஒரு ஆப்கான் பெண் மருத்துவரை காட்டுகிறார், என்ஜினீரிங் படிக்க இங்கிலாந்து போக ஆசைப்படும் குழந்தையை காட்டுகிறார், வீட்டில் ஆங்கிலம் பேசும் பெண்ணை காட்டுகிறார், மனைவியின் ஆஸ்துமாவுக்கு வைத்தியம் செய்ய வரும் பெண்ணை வில்லன் கதாபாத்திரம் கேவலமாக திட்டுவதை காட்டுகிறார், அதற்க்கு அந்த பெண் அமெரிக்க கைதிகள் இருக்கும் இடத்தை அமெரிக்கர்களுக்கு தெரியப்படுத்திவிடக் கூடும் என காரண வசனம் வைக்கிறார், இருப்பினும் பெண்ணுரிமை, சிறார்கள் உரிமை மீறப்பட்டதாக மட்டுமே பார்வையாளன் எடுத்துக்கொள்ளக் கூடியாதாக அந்த காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. கமலின் நேர்மைக்கும் வணிகத்துக்கும் இடையில் நடக்கும் போராட்டமோ? 

5. தலிபான்கள் பாவிக்கும் தொப்பி, தாடி, அலங்காரங்கள், அமெரிக்க உலங்கு வாநூர்த்திகளின் நிறம் அமைப்பு போன்ற பல நுணுக்கமான விடயங்களில் கமலின் ஆராய்ச்சியும், கவனமும் மெய் சிலிர்க்க வைக்கும் அதே வேளை, ஆப்கான்-அமெரிக்க போர் சம்பந்தமான அரசியலில் கொஞ்சமும் அக்கறை அற்று பொதுப் புத்தியை மட்டுமே மையமாக கொண்டு கதையையும், கதைக்கான கழத்தையும் அமைத்திருப்பது ரொம்பவுமே வேதனை தருகிறது. படத்தில் பலவாறான காட்சிகளும் இருக்கின்றன, ஆனால் ஒவ்வொரு காட்சிக்கும் அழுத்தம் கொடுக்கப்பட்ட விதம், கொஞ்சம் அமெரிக்க பக்கச்சார்ப்பு அதிகம் இருப்பதான, ஒரு வித சமநிலை பேணப்படாததான உணர்வை தருகிறது. ஒருத்தனுக்கு தீவிரவாதி இன்னொருத்தனுக்கு போராளின்னு சொல்வாங்க, அமெரிக்க ராணுவம் நடத்தும் கொடுமைகளையோ, குண்டு வீசி கொல்லப்பட்ட குழந்தைகள் பெண்களையோ, பொருளாதார ரீதியாக அந்த மக்கள் மீது தொடுக்கப்படும் யுத்தங்களையோ பற்றிப் பேசுவதை மிகக் கவனமாக தவிர்த்திருக்கிறார் கமல். தீவிரவாதி தலைவன் தனது குடும்பத்தை பறிகொடுத்துவிட்டு அழும் காட்சியும் அதற்க்கான அழுத்தமும், அவன் பெண் மருத்துவரை திட்டும் காட்சிக்கான அழுத்தத்தின் பாதி கூட இல்லை. விஜயகாந்த், அர்ஜுன் படங்களுக்கு எந்த விதத்திலும் சளைத்தது அல்ல இந்த படம், என்ன ஒரு வித்தியாசம் அவை இந்திய தேசப்பற்றை வலியுறுத்தும், இது அமெரிக்க தேசப்பற்றை வலியுறுத்துகிறது.

6. படம் தொடுக்கும் கருத்தியல் அரசியலை தள்ளிவிட்டுப் பார்த்தல் ஒரு ரசிக்கக் கூடிய என்டேர்டைன்மென்ட் சினிமாதான் இது. ஆயினும் விஸ்வரூபம் படம் எடுப்பதற்கு கமல் ஹாசன் தேவையில்லை, முருகதாஸ் போதும். கமல் ஹாசன் எனும் படைப்பாளியால் எல்லா விதத்திலும் இதை விட சிறந்த சினிமாவை வழங்க முடியும். இனிவரும் காலங்களிலாவது செய்வாரா கமல்? (விஜய் ரசிகர்களுக்கு வரிசையாக குருவி, வில்லு, சுறா போன்ற படங்களை பார்த்துவிட்டு காவலன் பார்த்ததான அனுபவம், கமல் ரசிகர்களுக்கு விஸ்வரூபம். அழுறதா சிரிக்கறதான்னு தெரியல)


டிஸ்கி: இன்னும் படம் சம்பந்தமான பல கருத்துக்கள் இருப்பினும் பதிவின் நீளம் கருதி(யும், பார்த்து ரொம்ப நாள் அனதால மறந்துவிட்ட காரணத்தினாலும்), இத்துடன் முடித்துக் கொள்கிறேன். 

டிஸ்கி: இஸ்லாத்தின் மீது அமேரிக்கா நிகழ்த்தும் மீடியா பயங்கரவாதமும், முஸ்லீம்கள், முஸ்லீம் நாடுகள் என பெயர் போட்டுக்கொண்டு சிலர்/அல்லது பலர் செய்யும் கலாசார பயங்கரவாதங்களும், அதற்க்கு தெரிந்தோ தெரியாமலோ இலக்காகிவிட்ட தமிழ்நாட்டு முஸ்லீம் மற்றும் முஸ்லீம் அல்லாத நண்பர்களும் தங்கள் பக்க நியாங்களையும், உண்மைகளையும் பரிமாறிக் கொள்ளவும், ஆரோக்கியமான விவாதங்களை நிகழ்த்தவும் தெரிந்தோ தெரியாமலோ கமல் மேடை அமைத்துக் கொடுத்திருக்கிறார். பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அறிவாளிகளின் கடமை. இதை விட்டு நம்ம குழாயடி சண்டைகளில்தான் நிலைத்திருக்க விரும்பினால் எந்த சுப்பனாலயும் நம்ம சமூகத்த காப்பாத்த முடியாது.

டிஸ்கி: நானும் எத்தன நாளைக்குத்தான் மொக்க பதிவாவே போட்டுக்கிட்டு இருக்கறது. சமுகப் பிரச்சினைகள்ள கருத்து சொல்லன்னும்கற ஆர்வம் எல்லாம் எனக்கும் வராதா? என்ன விடுங்கங்க, நான் எல்லாம் மொக்கப் பதிவர்ன்னு தெரிஞ்சே வாழ்ந்துக்கிட்டிருக்கேன், அவனவன் ஒளிவட்டப் பதிவர்ன்னு நெனச்சிக்கிட்டு மொக்க போட்டுக்கிட்டிருக்கான். 

Sunday, January 27, 2013

விஸ்வரூபம் - திரை விமர்சனம் (முடிந்தவரை நடுநிலையாக)


விஸ்வரூபம் திரை விமர்சனத்தை கமல் ஹாசனும் உலகநாயகனும் பதிவின் கடைசி வரிகளில் இருந்து ஆரம்பிப்பதே முறையாக இருக்கும் என்று நினைக்கிறேன். 

"விஸ்வரூபம் ட்ரெயிலர் படம் மீது பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை, இருப்பினும் வேட்டையாடு விளையாடு போன்ற ஒரு முழு கமெர்சியல் என்டேர்டைனராக அமைந்தால் பெரு மகிழ்ச்சி"

படம் பார்த்து முடிந்ததும் அந்த வரிகள் எவ்வளவு உண்மை என்பது ஆச்சர்யமாக உள்ளது. விஸ்வரூபம் படத்தை இரு வேறு கோணங்களில் இருந்து விமர்சிக்கலாம். இதில் எதை தெரிவு செய்வது என்கிற தடுமாற்றம் இருக்கிறது. வழக்கம் போல நம்ம பாணியில "கதை, படத்தின் மூலம் உருவான அரசியல்கள்" போன்ற வஸ்துக்களை தள்ளி வைத்துவிட்டு முடிந்தவரை நம்மளவில் நடுநிலையான ஒரு விமர்சனம். 

ஏழு வருடங்களுக்கு (வேட்டையாடு விளையாடுவிற்க்கு) பிறகு  கடைசிவரை பார்த்து ரசிக்கக்கூடிய ஒரு கமல் படம். நூறு சதவீத கமெர்சியல் என்டர்டைனர் இந்த படம். "ராஜ் கமல்" நேம் கார்டு போட்டத்துல இருந்து "எண்டு" கார்டு போடுற வரைக்கும் கமல் ஆட்சிதான் படத்துல மேலோங்கி இருக்கு.  படம் முழுதும் "ஒங்கம்மாள ...... (கெட்ட வார்த்தை)...., எப்ப இருந்துடா ஒனக்கு தெரியும்?" அவங்கள பொறந்ததுல இருந்தே எனக்கு தெரியும்" போன்ற கமல் ப்ரேன்ட் காமெடி, வில்லனோட சின்ன பையன கமல் ஊஞ்சல்ல வச்சு ஆட்டுறப்போ பெரிய பையன் வந்து ஒக்காந்து ஆட்ட சொல்றது போன்ற சின்னச்சின்ன இயக்குனர் டச்கள், ஒரு தமிழ் படத்துக்கே உரிய காமெடி, சென்டிமெண்ட், ஆக்ஷன், அப்பப்போ கவர்ச்சி (இது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம்) எல்லாத்தையும் சரி விகிதத்தில் கலந்த அதே நேரம் சுவாரஷ்யமான திரைக்கதை, கமலோட கலை ஆரவத்துக்கு தீனி போடுற ஒரு கதக் நடனக்காட்சி, அதற்க்கு ஏற்ற நளினம், என் போன்ற கமல் ரசிகர்கள தங்களையும் அறியாமல் விசில் போட வைக்கும் ஒரு சண்டைக்காட்சி, அத்துடன் ஆரம்பிக்கும் ரெண்டாம் அவதாரம். இதைவிட ஒரு கமல் ரசிகனுக்கு என்ன சார் வேணும்? இது நூறு வீத கமல் படம், கமல் ரசிகர்களுக்கும், அனைத்து தமிழ் ரசிகர்களுக்கும் கமல் ஒரு பெரிய விருந்தே வச்சிருக்கார். அஜித் ரசிகர்களுக்கு மங்காத்தா எப்படியோ, கமல் ரசிகர்களுக்கு விஸ்வரூபம் அப்படி.


படத்தோட பிளஸ்சஸ் மைனஸ்சஸ் பத்தி இனி பார்க்கலாம்.

1. படம் முழுவதும் கமல் கமல் கமல். சில இடங்களில் கமலுக்கு வயசானது தெரிஞ்சாலும், தனது நடிப்பால நம்மள மொத்தமா கட்டிப் போடுறாரு மனுஷன். அப்பாவித் தனமா மூஞ்சிய வச்சிக்கிட்டு பேசுற பல வசனங்கள் செம டைமிங். தசாவதாரம், மன்மதன் அம்புல நொந்து போனவங்களுக்கு பெரிய ரிலீப் விஸ்வரூபத்துல இருக்கு. படத்துல எப்ப எப்ப தேவையோ அப்ப அப்ப  சின்னதா வந்து விழும் காமிக் ரிலீப் இது ஒரு சுப்பர் ஹிட் படம்குறதுக்கான முதல் அறிகுறி.

2.  ஒரு இயக்குனாரா கமல் நிறையவே பாலிஷ் ஆகியிருக்காரு. குட்டிக் குட்டியா நெறைய ஷாட்கள், ஒரே ஷாட்ல பல பக்க வசனங்களால சொல்லமுடியாத பல விஷயங்கள சொல்லிடறார். உலக நாயகன கொஞ்சம் தள்ளிவைத்துவிட்டு கதைக்கு என்ன தேவையோ அத செஞ்சிருக்கார். கமல் இஸ் பாக் டு போர்ம்.

3. தமிழ் சினிமாவின் சில க்ளீஷேக்களை பயமே இல்லாமல் உடைத்திருக்கறார். குறிப்பா டூயட் பாட்டு கெடயாது, தமிழ் சினிமால வழமையா வரும் காதல்ங்கற கத்தரிக்காய் கெடயாது, ஓவர் சென்டிமென்ட் கெடயாது, எல்லா கதாபாத்திரங்களும் அவுங்க அவுங்க ஸ்பேஸ்  இருக்கு, கதாநாயகனை உயர்த்த மற்றைய கதாபாத்திரங்கள் வலிந்து தாழ்த்தப் படவில்லை (முட்டாள் FBI ஆபிசர் பாத்திரம் தவிர, அதுவும் இல்லன்னா எப்படி?), இதுல பெரிய விஷயம் என்னன்னா படம் முடியற வரைக்கும் இத நீங்க நோட்டிஸ் பண்ணவே மாட்டீங்க. அங்க நிக்கறாரு கமல்.


4. ஸ்ரேயா படங்களை விட அதிக க்ளீவேஜ் இருக்கு படத்துல, ஸ்ரேயா ஓகே, பூஜா குமார்? (என்ன சொல்றதுன்னே தெரியல, ஐ ஆம் வெரி கன்பியுஸ்டு!!)

5. ஒரு எக்ஸ்ட்ரா ஆர்டினரி சண்டைக் காட்சி இருக்கு படத்துல, ஆனா எனக்கு என்னமோ அது கொஞ்சம் ஒட்டாத மாதிரி (அதாவது ஒட்டுன மாதிரி) தெரியிது, பல ஹெலிகாப்டர் காட்சிகள், அப்கானிஸ்தான லாங் சாட்ல காட்டுற காட்ச்சிகள், சில ஆக்ஷன் சீக்குவன்ஸ் எல்லா இடத்துலயும் ஒட்டு வேலைப்பாடு ரொம்பவே தெரியுது, கைய வெட்டுறது, கழுத்த வெட்டுறது போன்ற இடங்கள்ள பிளாஸ்டிக் அப்படியே தெரியுது. கிராபிக்ஸ் டிப்பார்ட்மெண்ட் இன்னும் கொஞ்சம் யோசிச்சிருக்கனுமோ?

6. படத்துல நிறையவே ரத்தம், கொலை, நிறைய இடங்கள்ள முகம் சுளிக்க வைக்குது, (தீவிரவாதிய வேற எப்படிக் காட்டுறன்னு யாராவது கேள்வி கேட்டீங்க மூஞ்சில பூரான்  உட்ருவேன் ஆமா, கழுத்த வெட்டி ரத்தம் கொட்டக் கொட்ட கொன்னாத்தான் தீவிரவாதமா? ஒரே துப்பாக்கி குண்டுல, இல்லையின்னா மொத்தமா குண்டு போட்டு தடமே தெரியாம அழிச்சா அது என்ன அகிம்சையா?)


7. படத்துல, ஆடு இருக்கு, மாடு இருக்கு, ஆண்ட்ரியாவும் இருக்கு. (ஆண்ட்ரியா இருக்கறதே பிளஸ்ஸா, இல்ல ஆண்ட்ரியாவும் கூட  இருக்கறது மைனஸான்னு நீங்களே முடிவு பண்ணிக்கங்க)

8. ஷங்கர்-எஹ்ஷான்-லாய் இந்தியில எனக்கு பிடித்த இசையமைப்பாளர்கள் வரிசையில் உள்ளவர்கள். "கல் ஹோ நா ஹோ" படத்துக்காக தேசிய விருது வேற இருக்கு. ஆளவந்தான்ல இருந்து இதையும் சேர்த்து மூணு நாலு தமிழ் படம் இசை அமைத்திருந்தும் இதுவரை சரியான படம் எதுவும் அமையல. அது ஏன்னுதான் எனக்கும் புரியல.

9. படத்துல காரேக்டரைசேஷன் கொஞ்சம் சொதப்பல், எல்லா கதாபாத்திரத்துக்கும் மல்டிப்பிள் ஷேட் இருக்கே தவிர எந்த கதாபாத்திரத்துக்கும் ஒழுங்கான பேஸ் கெடயாது, எல்லாமே பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மென்ட் வீக் வகையறாதான். உதாரணமா ஹீரோ, வில்லன் ரெண்டுபேருமே முஸ்லிம், ஒருத்தர் தீவிரவாதி, இன்னொருத்தர் மதிப்புக்குரிய இந்திய  RAW ஏஜென்ட். தீவிரவாதிகளும் குண்டு வைக்கிறதுக்கு முன்னாடி நமாஸ் பண்றாங்க, ஹீரோவும் குண்டு வைக்கிறவன புடிக்கறதுக்கு முன்னாடி நமாஸ் பண்ணுறார். ரெண்டுபேருக்கும் கொள்கை அளவுல என்ன வித்தியாசம், ஏன் எதிர் எதிர் அணியில இருக்காங்கன்னு ஒரு சிங்கிள் ஷாட் கூட படத்துல இல்ல. முஸ்லிம் தீவிரவாதிகள வில்லனா காட்டிட்டு சைடுல ஹீரோ பிரெண்டா ஒரு ஜமாலையோ, இல்ல ஹீரோவுக்கு உதவுபவரா அப்துல் காதரையோ வைக்கிற  சாதாரண தமிழ் சினிமா டெக்னிக் தான் இங்கயுமா?


10. ராகுல் போஸ், நாசர், ஷரீனா வஹாப் போன்ற பல தேர்ந்த நடிகர்கள் இருக்கிறார்கள் படத்தில். முன்னவர் விஜயகாந்த் படங்களில் பார்த்த வாசிம்கான்களுக்கு மாற்றமாக ஒரு தீவிரவாதி, மஜ்னு சோனு சூடுக்கு அப்புறமா தமிழ்ல கத்திக்கத்தி கூப்பாடு போடாத தீவிரவாதி இவருதான்னு நினைக்கிறேன். மற்றைய ரெண்டுபேரும் வேஸ்ட்டட்.

11. கதை, படம் பேசும்/உருவாக்கும் அரசியல் போன்ற வஸ்த்துக்களை கவனிக்காம, ரொம்ப ஆராய்ச்சி பண்ணாம, ரெண்டர மணி நேரம் வெறும் என்டேர்டைன்மன்ட்ட மட்டுமே மனசுல வச்சி பார்த்தா ஒரு முழுத் திருப்தி தரக்கூடிய படம்.  (இதுக்கும் மேல ஒரு படத்துக்கு ஏதும் பிளஸ் தேவையா?)

ஐ ஆம்  வெய்ட்டிங்  பார் விஸ்வரூபம் பார்ட் II இன் இந்தியா....

நம்ம ரேட்டிங் : 7.5/10

****************************************

பதிவுக் குறிப்பு:
விஸ்வரூபம் படத்துக்கு நேர்மையான விமர்சனம்ன்னு எதுவும் வருமான்னு எனக்கு தெரியல, அதுக்கு என்ன காரணம்ன்னு உங்க எல்லாருக்கும் தெரியும்.

முதலாவதா ஒரு விஷயத்த சொல்லிக்கனும். "ஒரே மதத்தை சேர்ந்த, ஆனா இரு வேறுபட்ட புரிதல் அல்லது கொள்கை உடைய இரண்டு தனி நபர்களினதும் அவர்களை சூழ உள்ளவர்ககளினதும் போராட்டம்" தான் படத்தோட கதைன்னு எனக்கு தோணுது. படம் எந்த ஒரு இடத்திலும் இஸ்லாம் மதத்தை அவமதிக்க வில்லை, முஸ்லீம்களை அவமதிக்கிறதா, இல்லையான்னு என்னை கேட்டால் இல்லன்னுதான் சொல்லுவேன், ஆனா அவமதிக்குதுன்னு யாராவது எடுத்துக்க இடம் இருக்கான்னு கேட்டா இருக்கு. இங்கதான் படத்தோட பிரச்சினையே இருக்கு.  அதுக்காக தடை செய்யப்பட வேண்டிய படமான்னு கேட்டால் கண்டிப்பா இல்ல. ஹிந்தில "நியூ யோர்க்", "மை நேம் இஸ்  கான்", "குர்பான்", "மிஷன் இஸ்தான்புல்", ஹாலிவூட்ல "Traitor" போன்ற படங்கள் ஆரம்பித்து வைத்த விவாதத்தை தமிழில் விஸ்வரூபம் ஆரம்பித்து வைத்திருக்கிறது. அந்த படங்கள் எப்படி ரெண்டும் கெட்டானாக அலசியதோ, விஸ்வரூபமும் அப்படியே, அதை தவிர இஸ்லாத்தை அவமதித்து விட்டது, சிறுபான்மை மக்களை கமல் தாக்குகிறார்ன்னு கூச்சல் போடுற அளவுக்கு கேவலமான படம் ஒன்னும் கெடயாது. அதுக்காக கமல் தவறே செய்யலைன்னு சொல்லவும் முடியாது. படம் ஆரம்பித்து வைத்த விவாதத்தை ஆக்கபூர்வமான முறையில் தொடர வேண்டியவர்கள் கண்மூடித் தனமாக படத்தை எதிர்த்து ஒரு வரலாற்று தவறை செய்துவிடாமல் இருக்கனும்ங்கிறதே ஒரே ஆசை.


டிஸ்கி: அங்க படத்துக்கு தடைன்னு என்னிக்கி அறிவிச்சாங்களோ, அன்னில இருந்தே நம்ம ராசு மாமா, "படத்தப் பாரு படத்த பாரு"ன்னு ஒரே வற்புறுத்தல். வெள்ளிக்கிழமை இங்க "கான்"ன்னு பனிப் புயல் வந்ததால பாதை எல்லாம் மூடி படம் பார்க்க போக முடியல. இன்னிக்கி காலையில பாதை சீராக இல்லாதபோதும், ரிஸ்க் எடுத்து நூறு மைல் வண்டி ஓட்டி, மூணு மணிக்கே தியேட்டர் வாசலுக்கு போயி, டிக்கெட் கிடைக்காததால அடுத்த காட்சிக்காக ராத்திரி பத்து மணி வரைக்கும் குளிர்ல தியேட்டர் வாசல்ல காத்திருந்து பார்த்ததுக்கு படம் "ஒர்த்துதான்".

டிஸ்கி: தமிழ் நாட்டிலும் படம் வெளியாகி அனைவரும் பார்த்தபின் கருத்தியல் ரீதியாக படத்தை விமர்சிக்கலாம்ன்னு நினைக்கிறேன். இப்போதைக்கு சொல்லக்கூடியது, குறைவில்லாத என்டேர்டைன்மென்ட், ஒரு அக்மார்க் கலப்படமற்ற "கமல்" சினிமா. ஒரு கமல் சினிமாவில் என்ன நிறை இருக்குமோ அனைத்தும் இருக்கு, என்ன குறை இருக்குமோ அவையும் அனைத்தும் இருக்கு. அதுதான் விஸ்வரூபம். மற்றும் படி ஹாலிவூட் தரத்துல ஒரு தமிழ் சினிமான்னு சொல்ற அளவுக்கு தமிழ் சினிமா ஒன்னும் கேவலமும் கெடயாது, விஸ்வரூபம் ஒன்னும் எக்ஸ்ட்ரா ஆர்டினரி மேக்கிங்கும் கெடயாது.