Thursday, February 20, 2014

முற்போக்கு வாதம் பேசுவது எப்படி?

சமீபத்தில் திருமணமான எனது நண்பர் ஒருவர் முகப் புத்தகத்தில் ஒரு ஸ்டில் பகிர்ந்திருந்தார். ஒரு குழந்தையின் கிறுக்கல் போன்ற ஒரு ஓவியம் அது. அது தவிர வேறு எந்த குறிப்புக்களோ, விளக்கங்களோ இல்லை. அந்த பகிர்வு உணர்த்தும் பின்நவீனத்துவ குறியீடு என்ன என தீவிர ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது எனக்கு உதித்த சில சிந்தனைகளின் தொகுப்பே இது. 


சித்தாத்தங்கள் பேசும் ஒரு முற்போக்கு வாதியாக அடையாளம் காட்டிக் கொள்வது எப்படி? இன்று ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளும் இரு பெரும் இடதுசாரி முற்போக்கு சித்தாந்தங்களாக மார்க்ஸியமும், பின்நவீனத்துவமும் இருக்கின்றன. நம்ம நோக்கத்துக்கு இது பத்தின டீடையில் அலசல் எதுவும் அவசியமில்லை. பின்னவீனத்துவமாகட்டும் மார்க்ஸியம் ஆகட்டும் எதிர்ப்பு அல்லது புறக்கணிப்பு என்கின்ற புரிதலே போதுமானது. அத்துடன் சில கலைச் சொற்களும் அவசியம். இவை இருந்தால் இலகுவில் தன்னை ஒரு சித்தாந்த வாதியாக காட்டிக் கொள்ளலாம்.

கலைச் சொற்கள்: விளிம்புநிலை, மரபு, தனித்தன்மை, பொதுப் புத்தி, அறிவியக்கவாதி, முன்னகர்வு, பண்பாட்டரசியல், முரணியக்கம், பொருள்முதல் வாதம்.

தற்காப்பு: எப்போதுமே எதைப் பேசும்போதும் நான் அதுவல்ல என அறிவிப்புப் போட்டுக்கொள்ள வேண்டும். உதாரணமாக மார்க்ஸியம் பேசும் போது நான் மார்க்ஸிய வாதி அல்ல என பலமாக சொல்லிக்கொள்ள வேண்டும், இது முரண்பாடுகளில் இருந்து உங்களைக் காக்க உதவும்.

விதிமுறைகள்:

01. எந்த விஷயமா இருந்தாலும் மிகைப் படுத்தல் என்பது மிக அவசியம். உதாரணமா சிறுநீர் கழித்தல் என்பதை அவ்வாறு சொல்லாமல் "உயிரியலின் அடிப்படையான திரவ கழிவு சுத்திகரிப்பு" என்று சொல்லவேண்டும், ஆணுறுப்பு/பெண் துவாரம் போன்ற வார்த்தைகளை கோர்க்கும் வெளிப்படை பிரயோக லாவகங்கள் வரவேற்கப்படுகின்றன.

02. பொதுமைப் படுத்தல், உதாரணமாக ஒரு ஊழியரை தனி மனிதனாக பார்க்காது ஒரு நிறுவன அமைப்பாக அலது வர்க்கமாக பார்க்க வேண்டும். காற்றுப் பிரித்தல் போன்ற சப்ப மேட்டரா இருந்தா கூட "அடிப்படை உரிமை", "தனி மனித சுதந்திரம்" என்று வகைப் படுத்த வேண்டும்.

03. எப்போதும் கடுமையான வார்த்தைகளை அல்லது இழிவான வார்த்தைகளை பிரயோகிக்க வேண்டும். உதாரணமாக அராஜகம், அடக்குமுறை, அரைகுறை, உமிழ்தல். எதையும் எளிமையான மொழியில் சொல்லாமல் சற்று கடினமான, முரணான நடையில் சொல்ல வேண்டும். உதாரணமாக, ஒரு பிகரு கொஞ்சம் கலரா இருந்திட கூடாதே, உடனே பார்த்திடுவீங்களேன்னு சொல்வதற்குப் பதில் "வெண் தோல் ஏந்திய மகளிரை நோக்கும் சராசரி ஆணாதிக்க மனப்பான்மை" அப்பிடின்னு சொல்லணும்.

04. அடிக்கடி ஏதாவது ஒரு பெயர் புரியாத எழுத்தாளரையோ, சிந்தனையாளரையோ மேற்கோள் காட்டவேண்டும். அல்லது ஏதாவது ஒரு கவிதை வரி, செய்யுளை எடுத்துரைக்க வேண்டும். பெயர் புரியாத எழுத்தாளர்களின் பெயர்கள் எதுவும் உங்களுக்கு தெரியாது எனில் குறைந்த பட்சம் "உனக்கு புரியற மாதிரி சொல்லனும்ன்னா.... ஹ்ம்ம், பாரதி கூட ....." அப்பிடின்னு கொஞ்சம் பிரபலமான பெயர்களை எதோ அவர்கள் நீங்கள் படிக்கும் எழுத்தாளர்களில் இரண்டாம் தர எழுத்தாளர்கள் போன்ற தொனியில் உச்சரிக்க வேண்டும். 


05. மிக முக்கியமானது, உலகத்தில் பரவலாக ஏற்கப்பட்ட விடயமாக எது இருந்தாலும் அதை கண்மூடித்தனமாக எதிர்க்க வேண்டும், சற்று நலிவடைந்த சிந்தனையாக எது இருந்தாலும் அதை கண்மூடித்தனமாக ஆதரிக்க வேண்டும். உதாரணமாக திருமணம் குடும்பம் என்பது தனிமனித சுதந்திரத்தை மறுக்கும் பழமை வாய்ந்த சமூக அமைப்பு கட்டுமானங்கள், விஞ்ஞான ரீதியான மனித உணர்வுகளை, இச்சைகளை கட்டுப் படுத்த நினைக்கும் முரண் விதிகள் என கூற வேண்டும். மருத்துவ கருக்கலைப்பு என்பது பெண்ணின் அவளது உடல் மீதான தனிமனித உரிமை மட்டுமே, அதில் கருவுக்கு காரணமான ஆணுக்கோ, அல்லாது உயிராக துடிக்கும் அந்த சிசுவுக்கோ எந்த உரிமையும் இல்லை என எவ்வித சந்தேகமும் இன்றி வாதிக்க வேண்டும். கடவுள் மறுப்பு என்பது மிகவும் அடிப்படை.

06. சற்று கண்மூடித்தனமான விஞ்ஞானம் பேச வேண்டும். உதாரணமாக தன்னினச் சேர்கையினை ஆதரிக்கிறேன் பேர்வழி என கூறிக்கொண்டு, homosexuality என்பதும் Gender Identity Dissorder என்பதும் ஒன்றே என்பது போன்ற மருத்துவ விளக்கங்கள் கூறவேண்டும். பௌதீகவியல் கூறும் தத்துவங்களை அவை என்ன என்பதையே விட்டு விட்டு சித்தாந்தமாக பார்க்க வேண்டும். பெரு வெடிப்புக் கொள்கை, சார்புத் தத்துவத்தை தாண்டி ஸ்ட்ரிங் தியரி,  குவாண்டம் கிராவிட்டி என நகர்வது சிறந்தது. சில பௌதீகவியல், உயரியல் அறிஞர்களை தெரிந்து வைத்திருப்பதும், கடவுள், மதங்கள் போன்றவற்றை விஞ்ஞான ஒளியில் ஆராய்வதும் கூடுதல் சிறப்பு. 

இப்போ ஒரு சிட்சுவேசனயும், சித்தாந்தம் பேசும் ஒரு முற்போக்கு வாதியாக எப்படி நம்மை அங்கு அடையாளம் காட்டிக் கொள்வது எனவும் பார்ப்போம்.   

சிட்சுவேசன்: பசங்ககூட ஒண்ணா தலைவர் படத்துக்கு போக முடியாம மேனேஜெர் முட்டுக்கட்டை போடுதல்

சராசரி: மச்சான் மங்கூஸ் மண்டையன் படத்துக்கு ஆப்பு வச்சிட்டாண்டா, 

பின்நவீனத்துவம்: கார்பரேட் அமைப்புக்கள் தனிமனித சுதந்திரத்தை சூறையாடுகின்றன.

மார்க்ஸியம்: அதிகாரவர்கம் அடித்தட்டு ஊழியனின் அபிலாஷைகளை அனுமதிப்பதில்லை.


இப்போ முற்போக்குவாதம் பேசுவது எப்படி என தெரிந்து கொண்டீர்களா? இனி பயப்படாமல் அடித்து நொறுக்குங்கள். முக்கியமாக கவனிக்க வேண்டியது, உங்கள் சொந்த நிலைப்பாடு என்ன என்ற புரிதலை நோக்கி கடைசிவரை நீங்கள் பயணிக்கவே கூடாது, அது உங்களை ஒரு பிற்போக்கு வாதியாக மாற்றிவிடலாம். முன்னுக்குப் பின் முரணாக இருந்தாலும், கவலையே படாமல் சமூக அமைப்பில் குற்றம் காண்பதையும், அடுத்தவர் கருத்தை எதிர்பதயும் மட்டுமே குறியாகக் கொண்டிருந்தால் நீங்களும் ஒரு முற்போக்கு வாதியே, "சராசரி" மறுப்பு என்பதே முற்போக்கு வதம் ஆகும்.

டிஸ்கி: "மார்க்ஸியம், பின்நவீனத்துவம் என்றால் என்ன என்றே தெரியாது முற்போக்கு வாதிகள் மீது வெறுப்பை உமிழ்ந்திருப்பது, ஆசிரியரின் காழ்ப்புணர்ச்சியை காட்டுகின்றது", "கட்டுரையாளர், பல வேறுபட்ட சித்தாந்தங்களை போட்டு குழப்பியிருப்பது தெரிகிறது, எங்குமே ஒரு அடிப்படை தெளிவு, நேர்த்தி இல்லை" போன்ற விமர்சனங்கள் வரவேர்க்கப் படுகின்றன. 

டிஸ்கி: ஒருவேள முதல் பத்தியில் சொன்ன நம்ம நண்பர் அப்பாவாகப் போறாரோ? அந்த குறியீட்டுக்கு அர்த்தம் அதுவாக இருக்குமோ? அப்படி இருந்தால் வாழ்த்துக்கள்.

12 comments:

  1. மார்க்ஸியம், பின்நவீனத்துவம் என்றால் என்ன என்றே தெரியாது முற்போக்கு வாதிகள் மீது வெறுப்பை உமிழ்ந்திருப்பது, ஆசிரியரின் காழ்ப்புணர்ச்சியை காட்டுகின்றது", "கட்டுரையாளர், பல வேறுபட்ட சித்தாந்தங்களை போட்டு குழப்பியிருப்பது தெரிகிறது, எங்குமே ஒரு அடிப்படை தெளிவு, நேர்த்தி இல்லை"

    ReplyDelete
    Replies
    1. நான் மார்க்சிஸ்ட்டோ பின்நவீனதித்துவ வாதியோ அல்ல

      Delete
    2. //நான் மார்க்சிஸ்ட்டோ பின்நவீனதித்துவ வாதியோ அல்ல//
      ஏங்க அது எல்லாமே நீங்க "டிஸ்கி" போட்டிருப்பது

      Delete
    3. இது கூட நான் பதிவுலயே தற்காப்பு போட்டிருப்பதுததான் சாமி

      Delete
  2. ரொம்ப படிப்பியளோ

    ReplyDelete
    Replies
    1. அதுக்கும் நமக்கும் ரொம்ப தூரமுங்கோ....

      Delete
    2. //அதுக்கும் நமக்கும் ரொம்ப தூரமுங்கோ//
      எம்புட்டு தூரமுன்னு குலோமீட்டர்ல சொல்லுங்கப்பு

      Delete
  3. சும்மா போங்க சார்!உங்களுக்கு வேற வேலையே இல்ல!

    ReplyDelete
  4. எப்பா எனக்கு தலை சுத்துது ஒண்ணுமே பிரியல.

    ReplyDelete
    Replies
    1. //எப்பா எனக்கு தலை சுத்துது ஒண்ணுமே பிரியல//
      உடனே நல்ல டாகுடர பாருங்க.கல்லு கில்லு அடைச்சிருக்க போவுது.லேசரு அது இதுன்னு வச்சி வலியே இல்லாம ஒடைச்சி ஒரே நாள்ல ஊட்டுக்கு அனுப்பிருதாகளாம்.

      Delete
    2. நாலு பின்நவீனத்துவ கட்டுரைகள் படிச்சா தானா பிரின்சிடப் போகுது.

      Delete

உங்கள் கருத்துக்கள்!!