Tuesday, June 12, 2012

ஏ ஆர் ரஹ்மான் - ஒரு ஆச்சரியம்


நீண்ட நாட்களாகவே இசைப்புயல் என அறியப்படும் ஏ ஆர் ரஹ்மான் அவர்களைப் பற்றி ஒரு கட்டுரை எழுதவேண்டும் என்கிற ஒரு ஆவல் எனக்குள் இருந்தது. இசை பற்றி எனக்கு உள்ள அறிவும் சில பல காரணங்களால் ஏற்படும் நேரப் பற்றாக்குறையும் அவ்வப்போது "இதெல்லாம் உனக்கு தேவையா?" என்கிற கேள்வியை எனக்குள் எழுப்பி அந்த ஆர்வத்தை வந்த வேகத்திலேயே மழுங்கடித்துவிடும். அதனால் இன்றுவரை இதை எழுத முடியாது போனது ஒரு வருத்தமே. தொண்ணூறுகளின் பின்னர் இசை (அதுவும் திரை இசை) கேட்க்க ஆரம்பித்தவர்கள் பலரை போலவும் எனக்குள் ரஹ்மானும் அவரது இசையும் ஏற்படுத்திய தாக்கங்கள் பல. சமீபத்தில் திரு ரஹ்மான் அவர்களது பழைய பேட்டி ஒன்று காணக்கிடைத்தது அந்த ஆர்வத்தை என்னுள் தூண்டியதன் விளைவே இந்த கட்டுரை. 

ஏ. ஆர் ரஹ்மானின் இசை பலநேரங்களில் எனக்கு ஒரு போதயாகவே இருந்திருக்கிறது. ஒரே பாடலை நூறு தடவை கேட்டபின்னரும் நூற்றி ஓராவது தடவை அந்த பாடலில் அதுவரை நான் கேட்டிராத ஒரு புதிய ஒலியினை அல்லது இசையினை முதல்தடவையாக கேட்பதும் அதனால் ஏற்படும் பரவச நிலையும் ஏ ஆர் ரஹ்மான் ஒருவரின் பாடலுக்கு மட்டுமே உள்ள சிறப்பியல்பு. ரஹ்மானது ஆரம்ப கால பாடல்களில் இருந்து தற்கால பாடல்கள் வரை இடைவிடாது தொடர்ந்து கேட்டு வருவதில் ரஹ்மானது திரையிசை பயணத்தை நான்கு அல்லது ஐந்து கட்டங்களாக பிரித்து நோக்கலாம்.

ரோஜா முதல் இந்திரா வரையில் 

இந்த காலப்பகுதியில் ரஹ்மானது இசையில் வெஸ்டேர்ன் க்லாசிகளை விட கிராமிய இசையின் தாக்கம் மிக அதிகமாக காணப்படும், ரஹ்மான் பெரிதும் பிரபலமில்லாத காலத்தில் வழங்கிய இசை, இன்றுவரை இந்த காலகட்ட பாடல்களுக்கு தனி சிறப்பியல்பு உண்டு. இன்னுமொரு வகையில் ரஹ்மானின் பொற்காலம் இதுவென்றே நான் சொல்வேன்.  இந்த காலகட்ட இசையில் பெரிதும் பேசப்பட்ட பாடல்கள் ரோஜா, திருடா திருடா, டூயெட், கருத்தம்மா, காதலன் மற்றும் பாம்பே ஆக இருந்தாலும் என்னை கவர்ந்த பாடல்கள்  "நேற்று இல்லாத மாற்றம்", "கண்ணுக்கு மை அழகு" (புதிய முகம்),  என்னாத்தா பொன்னாத்தா, கண்களில் என்ன ஈரமோ (உழவன்), ராசாத்தி (திருடா திருடா), சித்திரை நிலவு (வண்டி சோலை சின்னராசு), என்மேல் விழுந்த மழைத்துளியே (மே மாதம்), அழகு நிலவே, உயிரும் நீயே (பவித்திரா),  நீ கட்டும் சேலை (புதிய மன்னர்கள்), தொட தொட மலர்ந்ததென்ன (இந்திரா), போன்ற பாடல்கள் அதிகம் பிரபலமாகதபோதும் அல்லது பலருக்கு மறந்துவிட்ட போதும் என்னை மிகவும் கவர்ந்த பாடல்கள். என்னை மிகவும் கவர்ந்த ஆல்பம் திருடா திருடா.

சிறு குறிப்பு: காதலன் திரைப்படத்தின் பின்னணி இசையில் ஒலிக்கும் ஒரு சிறு இசை துணுக்கே பின்னாளில் மிகப்பிரபல்யம் அடைந்த கண்மூடித்திறக்கும் போது (சச்சின் - தேவி ஸ்ரீ பிரசாத்) பாடலுக்கு இன்ஸ்பிரேஷனாக அமைந்தது என நினைக்கிறேன்.



ரங்கீலா முதல் கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன் வரை.

ரஹ்மானின் இந்திப் பிரவேசம் ரன்கீலாவில் ஆரம்பித்ததில் இருந்து அவரது இசை வடிவமும் மேற்கத்திய பாணியையும், சூபி இசை, வட இந்திய இசை, கவாலியை நோக்கி நகர ஆரம்பித்த காலம் இது. ரஹ்மான் தமிழில் புகளின் உச்சியை அடைந்த காலமும் இதுவே. இந்த கால கட்டத்தில் இவரது இசையில் வந்த முத்து, இந்தியன், காதல் தேசம், மின்சார கனவு, ரட்சகன், ஜீன்ஸ், உயிரே, என்சுவாச காற்றே, படையப்பா, காதலர் தினம், தாளம், சங்கமம், முதல்வன், தாஜ்மகால், அலைபாயுதே, கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன் போன்ற திரைப்பட பாடல்கள் பலராலும் கவனிக்கப்பட்ட மிகப்பிரபல்யமான பாடல்கள்தான். தமிழ் சினிமாவில் முதல் முறையாக திரைப்படத்தின் பிரமாண்ட பட்ஜெட்தடில் ஒரு பங்கு ஆடியோ விற்பனையை நம்பியே எடுக்கப்பட்ட காலம். இவற்றிலும் பலரும் மறந்துவிட்ட என்னை கவர்ந்த பாடல்களாக காதலே நீ என்ன செய்வாயோ (ரங்கீலா),  விடுகதையா இந்த வாழ்க்கை (முத்து), மலர்களே, நாளை உலகம் (லவ் பேர்ட்ஸ்), கப்பலேறி போயாச்சு (இந்தியன்), ரோமியோ ஆட்டம் போட்டால், தண்ணீரை காதலிக்கும், மெல்லிசையே (மிஸ்டர் ரோமியோ),  கனவா இல்லை காற்றா (ரட்சகன்), எங்கே என் புன்னகை, மன்னவா (தாளம்), செந்தேனே, என்னுயிரே (உயிரே) போன்ற பாடல்கள் இருக்கின்றன.

தனி அல்பமாக என்னை மிகவும் கவர்ந்தது இருவர், இன்றும் இருவர் திரைப்படத்தின் எந்த ஒரு பாடலை கேட்க்கும் போதும் என்னையறியாமல் ஒரு பரவச நிலையை அடைய நேரிடுகிறது. அதிலும் குறிப்பாக உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும் கவிதையும் அதற்கான இசையும் அதே போல் உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு கவிதையும்.


ரிதம் முதல் ரங்கதே பசந்தி வரை 

தமிழை பொறுத்தவரை ரிதம், பாய்ஸ், ஆயுத எழுத்து, நியூ போன்ற படங்கள் வந்தாலும் இது ரஹ்மானுக்கு பேறாத காலம். ஹாரிஸ் ஜெயராஜின் வருகையுடன் பலரும் ரஹ்மானின் தசாப்த்தம் முடிந்துவிட்டதாகவே கருதினார்கள். ஆனால் இந்தியில் ரஹ்மான் ஆட்சி ஆரம்பித்தது இந்த காலத்தில்தான். மேலும் ரஹ்மானுக்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்ததுடன் ஹாலிவூடின் கவனம் இவர் பக்கம் திரும்பியதும் இந்த காலத்தில்தான். ரோஜா ஆல் டைம் சிறந்த பத்து திரயிசைத்தொகுப்புக்களுள் ஒன்றாக தெரிவுசெய்யப்பட்டது, ரஹ்மானின் பாடல்கள் சிறந்த ஆரிஜினால் பாடலுக்கான ஆஸ்கரில் லாங் லிஸ்ட் செய்யப்பட்டது, ஒட்டகத்தை கட்டிக்கோ பாடல் பிரெஞ்சு இசை குளுவினர்களினால் ரீமிக்ஸ் செய்யப்பட்டு பின்னாளில் பிரெஞ்சு திரைப்படம் ஒன்றில் இடம்பெற்றது,   பாம்பே ட்ரீம்ஸ் தைய தையா பாடல் இன்சயிட் மேனில் இடம்பெற்றது என இவர் புகழ் ஹாலிவூட் வரையில் பரவ ஆரம்பித்தது. வாரியர்ஸ் ஆப் ஹெவென் அண்ட் ஏர்த் படம் வெளியாகியதும் இந்த காலகட்டத்தில் தான். லகான், சுபிதா, ஸ்வதேஸ், போன்ற படங்கள் வெளியானதும் இந்த காலகட்டத்தில்தான்.


போர்க்களம் அங்கே (தெனாலி), தோம் கருவில் (ஸ்டார் - அலைபாயுதே ஆல்பத்தில் இடம்பெற்ற ஒரு இசைத்தொகுப்பு பின்னர் பாடல் வடிவம் பெற்றது), வெள்ளைப் பூக்கள், விடைகொடு எங்கள் நாடே (கன்னத்தில் முத்தமிட்டால்), அழகிய சின்ரெல்லா, அனார்கலி, என்னுயிர் தோழியே (கண்களால் கைது செய்), ஸ்பைடர்மேன், நியூ (நியூ), மயிலிறகே (அன்பே ஆருயிரே) போன்ற பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள். தனி ஆல்பமாக மிகவும் பிடித்தது ஸ்வதேஸ் (தேசம்). எந்தன் தேசத்தின் குரல், தாய் சொன்ன தாலாட்டு, கேட்டேனா, காவிரியா, மலை மேக வண்ணா தமிழிலும், யே தாரா, யூ ஹீன் சலா இந்தியிலும் பிடித்த பாடல்கள். எந்தன் தேசத்தின் குரல் இன்றும் கிறக்கம் தரும் ஒரு பாடல்.


சில்லின்னு ஒரு காதல் முதல் ராக்ஸ்டார் வரை 

ரஹ்மான் புகழின் உச்சத்துக்கு சென்ற காலம் இதுதான். கோல்டன் க்ளோப், ஆஸ்கர் என விருதுகள் தேடி வந்த காலம். தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் என கலந்து கட்டி அடித்த காலம். தமிழை பொறுத்தவரை ஒரு சிறிய தோயவிளிருந்து மீண்டு வந்து சில்லின்னு ஒரு காதல், வரலாறு, குரு, சிவாஜி, அழகிய தமிழ் மகன், சக்கரகட்டி, விண்ணை தாண்டி வருவாயா, ராவணன், எந்திரன் எனவும், ஹிந்தியில் ஜோதா அக்பர், ஜானே து யா ஜானே நா, யுவராஜ், கஜினி, டெல்லி 6, ப்ளூ, ராக்ஸ்டார் எனவும், ஆங்கிலத்தில் ஸ்லம்டாக், கப்பில் ரெட்ரீட், 127 அவர்ஸ் எனவும் பல வெற்றி திரை இசை பாடல்களை குடுத்த காலம். ஆங்கில பாடல்களில் சஜ்னா, குறு குறு (இது ஒரு தமிழ் பாடல்), நா நா (கப்பிள்ஸ் ரெட்ரீட்), இப் ஐ ரைஸ் (127 அவர்ஸ்) போன்ற பாடல்கள் எனை மிகவும் கவர்ந்தவை. தனி ஆல்பமாக அனைத்து தமிழ் ஆல்பங்களுடன், டெல்லி 6 உம மிகப்பிடித்தது.

சமீபத்தில் பீபில் லைக் அஸ் படத்தின் ட்ரைலரை தேட்டரில் பார்த்தபோது அங்கு அமர்ந்திருந்த சிலருக்கு அது ரஹ்மான் இசை அமைக்கும் படம் என்பது தெரிந்திருந்தது. ரஹ்மானின் ஐந்தாவது காலகட்டம் இனிமேல்தான் ஆரம்பமாகிறது. அதன் வீரியத்தை காண காத்தரிக்கும் ஒரு ரஹ்மான் ரசிகன் நான்.


டிஸ்கி: ஒரு சில இந்தியர்கள் மட்டுமே எட்டிய ஒரு மிகப்பெரிய உயரத்தை எட்டிய இந்த மனிதரிடம் அவரது இசையை விடவும் என்னை கவர்ந்த விடயங்கள் பற்றிய ஒரு கட்டுரையாகவே இதை எழுத ஆரம்பித்தேன், அவரின் இசையும் அதன் மீதான ஈடுபாடும் கட்டுரையின் நோக்கத்தினையே திசை திருப்பி விட்டது என நினைக்கிறேன். மீண்டும் ஒரு நேரம் கிடைத்தால் தொடர்கிறேன்.

அப்டேட்: ஏ. ஆர். ரஹ்மான் - ஒரு ஆச்சர்யம் (பகுதி இரண்டு)

10 comments:

  1. ரகுமானை பற்றிய அருமையான பதிவு நண்பா. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. வணக்கம் டாக்டர்!நல்லா அலசி ஆராஞ்சிருக்கீங்க!!!!!!

    ReplyDelete
  3. //ஏ ஆர் ரஹ்மான் - ஒரு ஆச்சரியம்//

    நீங்க பதிவு போடறதே ஒரு ஆச்சரியம் தான் பிஸி பீப்பிள்!

    ReplyDelete
  4. நல்ல அலசல்..நல்ல பாடல்களை குறிப்பிட்டுச் சொன்னது அருமை..

    எனக்கு ரஹ்மானின் இசையை விட ரஹ்மானின் குணநலன் ரொம்பப் பிடிக்கும்..எனவே ரஹ்மான் பற்றிய உங்கள் அடுத்த பதிவையும் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  5. நல்ல அலசல்...... வெவ்வேறு காலகட்டங்களாக பிரித்திருப்பது மிகவும் சரி!

    ReplyDelete
  6. எனக்கும் திருடா திருடா மிகமிகப்பிடிக்கும்........ இன்றுவரை ரஹ்மானின் மாஸ்டர்பீஸ் அதுதான் என்று நினைக்கிறேன். அதில் உள்ள ஃப்ரெஷ்னஸ், ஒரிஜினாலிட்டி........ சான்சே இல்லை.......

    ReplyDelete
  7. வணக்கம் பாஸ் எப்படி சுகம்?

    நல்ல அலசல் எனக்கு பெரிதாக பாடல்கள் பிடிப்பது இல்லை ஆனால்
    ரஹ்மானின் இசையில் வந்த பாடல்களில் என்னை அறியாமல் ஒரு ஈர்ப்பு இருக்கத்தான் செய்யுது

    ReplyDelete
  8. சூப்பர் போலீஸ் படத்தில் (தெலுங்கு டப்பிங்) வரும் சுந்தரா சுந்தரா பாடல் கேட்டிருக்கிறீர்களா?

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்!!